ஜே.கே.ரித்தீஷ் மரணம் அதிர்ச்சியளிக்கிறது: நடிகர் விஷால் உருக்கம்!
என்னால் என் நண்பன் ஜே.கே.ரித்தீஷ் மரணத்தை நம்பமுடியவில்லை என்று விஷால் உருக்கமாக கூறியுள்ளார்.
சென்னை: என்னால் என் நண்பன் ஜே.கே.ரித்தீஷ் மரணத்தை நம்பமுடியவில்லை என்று விஷால் உருக்கமாக கூறியுள்ளார்.
திமுக வாரிசு ஜே.கே.ரித்தீஷ்
திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான ஜே.கே.ரித்தீஷ் தொடக்கத்தில் அதிமுக-வில் இருந்தார். பின்னர் திமுக-வுக்கு மாறினார்.கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.-யான ரித்தீஷ், கடந்த 2016-ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுக-வில் இணைந்தார். திரையுலகிலும் சில படங்கள் நாயகனாக நடித்துள்ளார்.
நடிகர் சங்கம் விவகாரம்
சமீபகாலமாக நடிகர் சங்கம் விவகாரத்தில் தலைகாட்டி வந்தார். முதலில் விஷாலின் பாண்டவர் அணிக்காகப் பாடுபட்ட ரித்தீஷ் நாளடைவில் விஷாலுக்கு எதிராக மாறினார்.
ஜே.கே.ரித்திஷ் மரணம்
இந்நிலையில் ராமநாதபுரத்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்ள அங்கு சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக திடீர் மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.
இவரது மறைவிற்கு நடிகர் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மரணத்தை நம்பமுடியவில்லை
இது குறித்து அவர் தனது தனது டிவிட்டர் பக்கத்தில், ‘வாழ்க்கை எப்படி முன் கணிக்க முடியாததாகிவிடுகிறது. என்னால் என் நண்பன் ஜே.கே.ரித்தீஷ் மரணத்தை நம்பமுடியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது. நடிகர் சங்கத் தேர்தலின் போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்துக்கு மனவலிமையைக் கொடுக்குமாறு கடவுளைப் பிராத்திக்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’ பதிவிட்டுள்ளார்.
ஜே.கே.ரித்தீஷின் மறைவு அரசியல் வட்டாரத்தில் மட்டுமன்றி, திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்க: பைக்கில் மகத்துடன் ஊர் சுற்றும் யாஷிகா! வசைபாடும் நெட்டிசன்கள்!