சென்னையில் ஐபிஎல்: தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? கரெக்ட்டாக ஆஜரான கஸ்தூரி
ஐபிஎல் போட்டிகளை எதிர்த்து கடந்த வருடம் போராடியவர்கள் இப்போது எங்கே போனார்கள்? என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஐபிஎல் போட்டிகளை எதிர்த்து கடந்த வருடம் போராடியவர்கள் இப்போது எங்கே போனார்கள்? என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
12 -வது ஐபிஎல் டி-20 சீசன் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.
ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக் கூடாது
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு நடைபெற்றபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக் கூடாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதிராஜா, சீமான் மீது வழக்கு பதிவு
பாரதிராஜா, சீமான், தனியரசு, வைரமுத்து, அமீர், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர், ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானத்தை முற்றுகையிட்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு அனைவரும் சென்றனர். இதனால், 500ற்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் சென்னையில் நடைபெற வேண்டிய போட்டிகள், புனே மைதானத்துக்கு மாற்றப்பட்டன.
நடிகை கஸ்தூரி ஆஜர்
இந்நிலையில்,நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இன்று #IPL12 விமர்சையாக துவக்கம். போன வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை, தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த முறை ஏன் போராடவில்லை என்கிற ஆதங்கமா?
நடிகை கஸ்தூரியின் இந்த டிவீட்க்கு சமூகவலைதள வாசிகளோ, ‘ இந்த முறை ஏன் போராடவில்லை என்கிற ஆதங்கமா? இல்லை போன முறை போராடியதே தவறு என்ற எண்ணமா?உங்களை போன்ற தூண்டிவிடக்கூடிய சமூக ஆர்வலர்களை சமூக வலைதளங்கள் மற்றும் விவாத மேடைகள் தவிர களத்தில் எங்கும் காணமுடியவில்லையே ?! ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.