சிம்பு படத்தில் நடிக்கிறேனா? நடிகர் சுதீப் டிவிட்டரில் விளக்கம்!
சுதீப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், படத்தின் கதையை கேட்டு சுதீப் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த ஆண்டு அறிவித்தார். ஆனால் சில காரணங்களால் மாநாடு திரைப்படம் கைவிடப்படுவதாகப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடையப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் மாநாடு படப்பிடிப்பு துவங்கவுள்ளது. அரசியல் த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார்.
இதனிடையே மாநாடு திரைப்படத்தில் சிம்புக்கு வில்லனாக நடிக்க டாப் ஹீரோக்களில் ஒருவரை வெங்கட் பிரபு தேடி வருகிறாராம். அதனால் நான் ஈ படத்தின் வில்லனும் பிரபல கன்னட நடிகருமான கிச்சா சுதீப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், படத்தின் கதையை கேட்டு சுதீப் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மாநாடு படத்தில் நீங்கள் தான் வில்லனா? என்று ரசிகர் ஒருவர் சுதீப்பிடம் டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்ப, அது தவறான தகவல் என்று கூறி வதந்திக்கு முற்றப்புள்ளி வைத்துள்ளார்.
தற்போது வெங்கட் பிரபு படத்தின் முதற்கட்ட பணிகளை கவனித்து வரும் நிலையில் அடுத்தமாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.