கைதட்டி நன்றி தெரிவித்த பிரபலங்கள் …
உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸால் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிர்க்கொல்லி வைரஸிலிருந்து தப்பிக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் மார்ச் 22 ஆம் தேதியான இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அத்தியாவசிய வேலைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிறன்று வெளியே வர வேண்டாம்‘ என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து மக்கள் இன்று காலை 7 மணி முதல் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். இந்த சமயத்திலும் இரவு பகல் பாராது கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வெளியே வந்து கைத்தட்ட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி சரியாக 5 மணிக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசிய வேலைகளில் ஈடுபட்டோருக்கு மக்கள் கைதட்டி நன்றி தெரிவித்தனர். அந்த வரிசையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்து கைதட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோன், தெலுங்கு திரைப்பட நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் 5 மணிக்கு கை தட்டியும், ஒலி எழுப்பியும் நன்றி தெரிவித்தனர்.
நடிகை தேவையானி தனது குழந்தைகளுடன் ஒலி எழுப்பியும், நடிகை சார்மி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் கை தட்டியும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.