‘கீழடியின் வரலாறு சாதி, மதம், அரசியல் சார்ந்தது அல்ல’ : நடிகர் சசிகுமார் பேச்சு!
இவனுக்கும் கீழடிக்கும் என்னடா சம்பந்தம் என்று நினைக்கவேண்டாம்.
மதுரை: கீழடியில் கிடைக்கும் பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று நடிகர் சசிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரையில் ‘கீழடி வைகை நதி நாகரிகம்’ என்னும் தலைப்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பண்பாட்டு கழகத்தின் சார்பில் நடந்த இந்த விழாவில் நடிகர் சசிகுமார் மற்றும் மதுரை லோக்சபா எம்பி சு.வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குநருமான சசிகுமார், இவனுக்கும் கீழடிக்கும் என்னடா சம்பந்தம் என்று நினைக்கவேண்டாம். கடந்த 2015 ஆம் ஆண்டு கீழடியில் ஆய்வு மேற்கொண்ட போது நான் அதை நேரில் சென்று பார்த்தேன். இங்கு கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் நம்முடைய வரலாற்றை எடுத்துரைக்கிறது. கீழடியின் வரலாறு சாதி, மதம், அரசியல் சார்ந்தது அல்ல. அவை அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானது. இதனை யாரும் அரசியலாக்க வேண்டாம்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இது நம்முடைய வரலாறு. நம் முன்னோர்களின் வரலாறு. இதன் மூலம் நம்முடைய முன்னோர்களை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். கீழடியில் கிடைக்கும் பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அதன்மூலம் மக்கள் நம் இனத்தை அறிந்துகொள்வர். பள்ளி புத்தகத்திலும் கீழடி குறித்த வரலாற்று தகவல்கள் பாடமாக வரவேண்டும். குறிப்பாக திரைப்படத்திலும் கீழடி குறித்து தகவல் இடம்பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்’ என்றார்.