×

எம்பியும் எழுத்தாளருமான சு.வெங்கடேசனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ’இயல் விருது’!

கவிஞரும், எழுத்தாளரும் அரசியல்வாதியுமான திரு சு. வெங்கடேசன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறது. மதுரை எம்.பி மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019ம் வருடத்திற்கான இயல் விருது என அழைக்கப்படும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை 1989ல் இருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில்
 

கவிஞரும், எழுத்தாளரும் அரசியல்வாதியுமான திரு சு. வெங்கடேசன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறது.

மதுரை எம்.பி மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019ம் வருடத்திற்கான இயல் விருது என அழைக்கப்படும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை 1989ல் இருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கிவரும் கவிஞரும், எழுத்தாளரும் அரசியல்வாதியுமான திரு சு. வெங்கடேசன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறது.

 
இவர் மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர். பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் தனது முதல் கவிதை நூலினை வெளியிட்டுள்ளார். இளங்கலை வணிகவியல் படித்தவர். இதுவரை 4 கவிதை தொகுப்புகள், 5 கட்டுரை தொகுப்புகள், 2 புதினங்கள், ஒரு கிராஃபிக் நாவல் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய முதல் நாவலான காவல் கோட்டம் நூலுக்கு 2011ம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற எழுத்தாளர்களில் ஆக இளம் வயதினர் சு. வெங்கடேசன் என்ற பெருமை அவருக்குண்டு. முதல் நாவலுக்கே இவ்விருதினைப் பெற்ற முதல் எழுத்தாளர் இவரே. இந்நாவல் மதுரையின் காவல் உரிமையை மையப்படுத்தியது. சுமார் 600 ஆண்டுகாலப் பயணத்தினூடே மதுரையின் காவல் உரிமை கைமாறிய கதையை விரிவாக பேசுகிற நாவல். காலனிய அரசதிகாரமும் மக்கள் திரளின் உரிமையும் நேர்நிலையில் நின்று மோதும் போது உருவாகும் கொந்தளிப்பை பெரும் சித்திரமாக விரித்துள்ள நாவல். வசந்தபாலன் இயக்கத்தில் 2012ல் வெளிவந்த அரவான் திரைப்படம் இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டது. காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் இவ்வாறு சொல்கிறார். ‘நாவல் எழுதத் தொடங்கியபோது என் மூத்த மகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருந்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்ததது அதிகம்.’ 
 
இவர் ஆனந்த விகடனில் 111 வாரங்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரியின் தொடரை வாசகர்கள் தமிழக இலக்கிய சரித்திரத்தில் இதுவரை காணாத வகையில் வரவேற்றார்கள். உலகெங்கும் இருந்து வாசகர்கள் அடுத்த வாரத்துக்காக ஏங்கி காத்திருந்தார்கள். இவருடைய புகழ் தமிழ் உலகம் முழுக்க பரவ இந்த நாவல் காரணமாகவிருந்தது. சங்க இலக்கியத்தில் சில வரிகளில் அறியப்பட்ட வள்ளலும், வேளிர்குலத் தலைவனுமான பாரியை சேர சோழ பாண்டிய மன்னர் மூவரும் ஒன்றிணைந்து போர்தொடுத்தும் தோற்கடிக்க முடியாத கதையை இந்த நாவல் சொல்கிறது. இதனுடைய வெற்றி இன்று தமிழ் உலகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவர் மார்க்ஸிய பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியர். அத்துடன் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர். 2019ல் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மதுரைத் தொகுதியில் மார்க்ஸிய பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளால் வெற்றியீட்டியவர். இவர் மக்களைக் கவர்ந்திழுக்கும் பேச்சாற்றல் கொண்டவர். இவருடைய நாடாளுமன்ற உரைகள் புகழ் வாய்ந்தவை. இவர் நாடாளுமன்றத்தில் தமிழின் மேன்மைக்காக வைத்த கோரிக்கைகளும், அவதானிப்புகளும் பிரசித்தமானவை. ‘தமிழ் நாகரிகம் உருவான காலத்தை பள்ளிப் பாடப் புத்தகத்தில் கி.மு.ஆறாம் நூற்றாண்டு என மாற்ற வேண்டும்.’ ‘சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் ஒருவித போட்டியும் கிடையாது. சமஸ்கிருதம் தமிழிலும் பார்க்க 700 வருடங்கள் இளமையானது. நாம் ஏன் இளமையான ஒரு மொழியுடன் சண்டை போடப்போகிறோம்.’ 

 
சு.வெங்கடசேன் தமிழ் நாட்டிலும், வெளிநாடுகளிலும் மேடைகளில் தமிழின் மேன்மையை பரப்பி வருகிறார். தமிழின் தொன்மை பற்றியும், கீழடி ஆய்வு தரவுகளின் தாக்கம் பற்றியும் தொடர்ந்து விழிப்புணர்வு சொற்பொழிவுகள் ஆற்றுகிறார். இவர் தன் மனைவி பி.ஆர்.கமலாவுடனும், பிள்ளைகள் யாழினி, தமிழினி உடனும் மதுரையில் வசித்து வருகிறார். இயல் விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2020 ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்’ என்று அறிவித்துள்ளது.