அரசு பள்ளிகளை தத்தெடுத்த எல்கேஜி பட குழு!
எல்கேஜி படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கஜாபுயலால் பாதித்த அரசு பள்ளிகளை தத்தெடுக்க உள்ளதாக ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை: எல்கேஜி படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கஜா புயலால் பாதித்த அரசு பள்ளிகளை தத்தெடுக்க உள்ளதாக ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக அறிமுகமான ‘எல்.கே.ஜி’ திரைப்படம் கடந்த 22-ம் தேதி வெளியானது.பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார். இதில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்ததிருந்தனர். முழுக்க முழுக்க அரசியலைக் கலாய்க்கும் வகையில் அமைந்து இருக்கும் இப்படத்தின் வசூல் மட்டும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் சக்சஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஆர்ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளுக்கு படகுழுவினர் நன்றி தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து,நடிகர் ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில், ‘எல்கேஜி படத்தின் மாபெரும் வெற்றி நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகம். இந்த வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. இதற்கு கைமாறாக கஜா புயல் பாதித்த பகுதியில் உள்ள பத்து அரசு பள்ளிகளைத் தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடிவு செய்துள்ளோம்’ என்று அதில் கூறியுள்ளார். இவர்களின் இந்த செயலுக்குப் பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.