உறவுகள் தொடர்கதை! 21 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட இளையராஜா- கங்கை அமரன்
இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய சகோதரர் கங்கை அமரன். இவர் தனது அண்ணன்கள் பாஸ்கர், வரதராஜன், இளையராஜா உடன் இசைக்குழுவில் பயணித்தவர், பின்னர் தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், கதாசிரியர், இயக்குனர் என தனது பன்முக திறமையால் ரசிகர்களை சம்பாதித்தார். தற்போது தணிக்கை குழு உறுப்பினராகவும், பா.ஜ.,வின் ஆதரவாளராகவும் உள்ளார். இவரது மகன்களான மூத்தவர் வெங்கட் பிரபு தமிழில் குறிப்பிடத்தக்க இயக்குனராகவும், இளையவர் பிரேம்ஜி இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் வலம் வருகின்றனர்.
அண்ணன் இளையராஜாவுடன் அமரனுக்கு உறவு சரியில்லை, 2000ம் ஆண்டு ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் ஜெயராம் மற்றும் உதயபானு நடிப்பில் வெளியான 'சின்ன ராமசாமி பெரிய ராமசாமி' படத்தை தயாரிக்கும்போது இருவருக்கும் இடையே மன முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இளையராஜா மனைவி ஜீவா இறந்தபோதுகூட இறுதிச்சடங்கில் கங்கை அமரன் விசாரிக்க வரவில்லை. இவ்வாறாக இருவருக்கும் இடையேயான பிரச்னை 21 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது.
இந்த சண்டையை பற்றி கங்கை அமரனிடம் கேட்டால், அண்ணன் தம்பி சண்டையெல்லாம் வீட்டுக்கு வீடு இருக்கிறதுதான். தம்பியைத் திட்டாத அண்ணனும் இருப்பாங்களா என்ன? என கூறுவார். இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருந்த சூழலில், தற்போது கங்கை அமரனும் இளையராஜாவும் இன்று சந்தித்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு பின் இசைஞானி இளையராஜா, இன்று அவரது சகோதரர் கங்கை அம்ரனை நேரில் சந்தித்துள்ளார். இதுகுறித்த பதிவை பகிர்ந்துள்ள கங்கை அமரன், “இன்று நடந்த சந்திப்பு .. இறைஅருளுக்கு நன்றி … உறவுகள் தொடர்கதை” என குறிப்பிட்டுள்ளார். இருவரும் புதிய ப்ராஜக்ட் விஷயமாக பேசியதாக தெரிகிறது.
இதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள பிரேம்ஜி, “வெளுத்து கட்டிக்கடா
என் தம்பி தங்க தம்பி
கொடிய ஏத்திக்கடா
என் தம்பி தங்க தம்பி
வெளிச்சம் உன்னோட முன்னாலே
வெற்றி உன்னோட பின்னாலே
வெளிச்சம் உன்னோட முன்னாலே
வெற்றி உன்னோட பின்னாலே
வெளுத்து கட்டிக்கடா
என் தம்பி தங்க தம்பி” என என்ற பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார்.