×

நடிகை த்ரிஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

கொரோனா தொற்று மூன்றாவது அலை காரணமாக கடந்த  ஒருவாரமாக தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றினால் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சைகள் குறித்தும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பொது சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக சுகாதார நிலையங்களும் 30 படுக்கைகள் கொண்ட இடைக்கால கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. 

கொரோனா தொற்று சாமானிய மக்களை மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களையும் தாக்கிவருகிறது. மாணவர்கள், நடிகர், நடிகைகள் என அனைவரும் கொரோனாவுக்கு இலக்காகிவருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் நடிகர் சத்யராஜ்க்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது நடிகை த்ரிஷாவுக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பதாக அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து த்ரிஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. எனக்கு அறிகுறிகள் இருந்தன. தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் விளைவாக எனக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அதற்காக நான் நன்றி கூறுகிறேன். விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. 

தயவு செய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். நான் நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும் குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.