×

"அறிவுக்கே பிறந்த இனிய எதிரிகள்" - ஹேக் செய்யப்பட்ட பார்த்திபனின் பேஸ்புக்!

 

சமீப நாட்களாகவே பிரபலங்களின் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை மர்ம நபர்கள் ஹேக் செய்வது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அவர் போட்ட 1 லட்சத்து 59 ஆயிரம் ட்வீட்கள் ஒரே நாளில் மாயமாகி போனது. அதேபோல அவரது பெயருக்குப் பதிலாக Briann என்ற பெயர் மாற்றப்பட்டது. இருப்பினும் சென்னை சைபர் கிரைம் போலீஸார் ஹேக்கர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து குஷ்புவின் ட்விட்டர் ஐடியை மீட்டுக்கொடுத்தனர்.

அந்த வகையில் தற்போது நடிகரும் இயக்குநருமான பார்த்திபனின் பேஸ்புக் கணக்கை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். குளறுபடியாகவும் குதர்க்கத்தனமாகவும் பேசும் பார்த்திபனின் ஐடியை ஹேக் செய்திருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆபத்து பார்த்திபனுக்காக அந்த ஹேக்கர்களுக்கா என்று தான் தெரியவில்லை. ஏனென்றால் இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர் செய்த ட்வீட் தான் அப்படி நினைக்க வைக்கிறது.


அந்த ட்வீட்டில், "என் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம். அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம். ஆனால் அறிவுக்கே பிறந்த சில இனிய எதிரிகள் ஹேக் செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் கொள்ள சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். பார்த்திபன் சொன்னது போலவே அவருக்கு துளியும் சம்பந்தமில்லாத வீடியோக்களை ஹேக்கர்கள் களமிறக்கி வருகின்றனர். அவருடைய ரசிகர்கள் அனைவரும் ஹேக் செய்யப்பட்டது தெரியாமல் ஏன் இந்த திடீர் மாற்றம் என கேள்வியெழுப்பி வருகின்றனர்.