மகளுக்கு திருமணம் செய்து பார்த்துவிட ஆசையாக இருந்தார்.. கே.வி.ஆனந்த் நண்பர் உருக்கம்
மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் குறித்து அவரது நண்பர், சங்கர் கிருஷ்ணமூர்த்தியின் உருக்கமான பதிவு இது. கே.வி.ஆனந்துடனான தனது நட்பு நினைவலைகளை அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது:
’’எனது மிக மிக நெருங்கிய நண்பரும், இந்தியாவின் மிக சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரும், சிறந்த இயக்குனரும் ஆன ஒரு மிக சிறந்த மனிதர், நண்பர் திரு கே. வி. ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார் என்று லோகு எனக்கு போன் செய்து சுமார் ஆறரை மணியளவில் சொன்னபோது, சத்தியமாக நம்பவில்லை.. அதிர்ச்சிக்குள்ளானேன்.
சில மணி நேரங்கள் இயங்க முடியவில்லை.. எங்கள் நட்பு சினிமாவை தாண்டியது..நீங்கள் ஆனந்தின் மூன்று படம் நடித்தீர்கள் என்று பலர் இன்று சொன்னார்கள்.. அதையெல்லாம் தாண்டி அவர்களுக்கெல்லாம் தெரியாத ஒரு நெருங்கிய நட்பு எங்களுக்குள் இருந்தது..ஏவிஎம் ஷண்முகம் , குமரன் சார், சௌகார் ஜானகி அம்மா, சூர்யா என்று எல்லோருக்குமே அது தெரியும். அவரது மகளுக்காக நல்ல வரன் ஒன்று, அவர் சொல்லி, தேடி கொண்டிருந்தேன். இந்த வருடம் திருமணம் முடித்து விடலாம் என்று சொன்னார். ஆசையாக இருந்தார்.
இரண்டு மகள்களும் , மனைவியும் சினிமா சாயம் கொஞ்சம் கூட இல்லாதவர்கள். அவர்கள் வீடு , வாழ்க்கை ,அவரது பண்ணை வீடு , தோட்டம் என்று போய் கொண்டிருந்தது. நான் சென்னையில் செட்டில் ஆகி விட்டேன் என்று சில மாதங்கள் முன்பு சொன்ன போது, மகிழ்ந்து போனார்.
இனி அடிக்கடி சந்திக்கலாம் சார்னு சொன்னார். சொன்னபடியே பல முறை சந்தித்தோம். அவரது புது வீட்டுக்கு போய் வந்தேன். கடைசியாக நாங்கள் இருவரும் சேர்ந்து செய்த ஒரு நிகழ்ச்சிதான் அவரது கடைசி போது நிகழ்ச்சி என்று நினைக்கிறன். அதன் புகைப்படங்கள் ,வீடியோக்களை பதிவிடுகிறேன். ஏராளமான நினைவுகள், பயணங்கள் கணக்கில் அடங்கா நிகழ்ச்சிகள், புகைப்படங்கள்.
எல்லாமே. அவரை இழந்து வாடும் அவரது தாய், மனைவி, அத்தை, அவரது இரண்டு செல்ல மகள்கள், அமெரிக்காவில் உள்ள சகோதரர்கள் என்று அனைவருக்கும் எனது மிக மிக ஆழ்ந்த இரங்கல்கள். சொல்ல வார்த்தையே இல்லை.. எனது ஆத்ம நண்பரை இழந்தேன். இதிலிருந்து எப்படி மீண்டு நான் வர போகிறேன் என்று தெரியவில்லை. விடை கொடுத்து அனுப்ப முடியவில்லை ஆனந்த்.. கண்ணீரில் மூழ்கி விட்டேன்.. என்னை கரையேற்றவாவது வாருங்கள்.
உங்களை குருவாக பாவிக்கும் லோகு போன்றவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும். நான், லோகு, கிரண், ஹேமா, ஸ்ரீகாந்த், அப்துல் இன்னும் ஏராளமானோர் என்ன சொல்லி ஆறுதல் அடைய போகிறோம்.
இந்த ஜென்மத்தில் நாம் மீண்டும் சந்திக்க முடியாதா .. ஐயோ .. அடிக்கடி பேசுவோமே.. ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது நானும் ஆனந்தும் மொபைல் இல் பேசியதே இல்லை. இரண்டு மணி நேரம் கூட தொடர்ந்து பேசிய ரெகார்ட் உண்டு. அவ்வளவு விஷயங்கள்.. அவருக்கு ஆர்வம் இல்லாத துறையே இல்லை. அனைத்தையும் பற்றி கேட்டு தெரிந்து கொள்வார். அவருக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் கணினியை பார்க்க மாட்டார். நேராக எனக்கு போன் வரும்.. பேசுவார்.. எங்கே போகிறது இந்த கொடிய வாழ்க்கை. நல்ல மனிதர்களை இப்படி கூட்டி செல்லும் மாபாதக மரணம்.’’