×

கோடக் மகிந்திரா வங்கி வட்டி வருவாய் 30 சதவீதம் அதிகரிப்பு.. லாபம் ரூ.2,792 கோடி..

 

கோடக் மகிந்திரா வங்கி 2022 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.2,792 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோடக் மகிந்திரா வங்கி தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. கோடக் மகிந்திரா வங்கி 2022 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.2,792 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 31 சதவீதம் அதிகமாகும்.

2022 டிசம்பர் காலாண்டில் கோடக் மகிந்திரா வங்கியின் நிகர வட்டி வருவாயாக (வட்டி வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ.5,653 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் கோடக் மகிந்திரா வங்கி நிகர வட்டி வருவாயாக ரூ.4,334 கோடி ஈட்டியிருந்தது. 2022 டிசம்பர் காலாண்டில் கோடக் மகிந்திரா வங்கியின் நிகர வட்டி லாப வரம்பு 4.62 சதவீதத்திலிருந்து  5.47 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2022 டிசம்பர் காலாண்டில் கோடக் மகிந்திரா வங்கியின் மொத்த வாராக் கடன் 2.7 சதவீதத்திலிருந்து 1.9 சதவீதமாக குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, கோடக் மகிந்திர வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.10 சதவீதம் உயர்ந்து ரூ.1,782.60ஆக இருந்தது.