×

வர்த்தக துளிகள்.. நாளை முதல் பாக்கெட் மோர், செக், மருத்துவமனை அறைகளுக்கு வரி
 

 

பாக்கெட் லஸ்ஸி, மோர் மற்றும் தயிர் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி.யில் அளிக்கப்பட்ட வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளது. ஜூலை 18ம் தேதி (நாளை) முதல் பாக்கெட் லஸ்லி உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும். இதனால் நாளை முதல் இந்த பொருட்களின் விலை அதிகரிக்கும். மேலும், நாளை முதல் காசோலை வழங்க வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்தில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் உள்ள அறை வாடகைக்கும் (ஐ.சி.யூ. தவிர்த்து) வரி விதிக்கப்படும்.

உள்நாட்டு உற்பத்தி நிலவரம், தேவை, உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை கருத்தில்  கொண்டு மத்திய அரசு கடந்த மே 13ம் தேதி அனைத்து வகையான கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்நிலையில் உக்ரைன் போரால் கோதுமை கிடைப்பு தடைப்பட்டது மற்றும் விலை உயர்வு போன்ற காரணங்களால் சர்வதேச உணவு நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் கோதுமை ஏற்றுமதி செய்யும்படி இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து மொத்தம் 18 லட்சம் டன் கோதுமையை 12க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தியாவின் சரக்குகள் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் சுமார் 23.52 சதவீதம் அதிகரித்து 4,013 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதேவேளையில், கடந்த ஜூன் மாதத்தில் சரக்குகள் இறக்குமதி 57.55 சதவீதம் உயர்ந்து 6,631 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் சரக்குகள் வர்த்தகத்தில் வர்த்தக பற்றாக்குறை 172 சதவீதம் உயர்ந்து 2,618 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2022 ஜூன் மாதத்தில் 15.18 சதவீதமாக குறைந்துள்ளது. 2022 மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.88 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இருப்பினும் தொடர்ந்து 15வது மாதமாக கடந்த ஜூன் மாதத்திலும் மொத்த விலை பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. இந்த நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் பணவீக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.