கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
கச்சா எண்ணெய் விலை, சில்லரை விலை பணவீக்கம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்க பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டுக்கு கிடைக்கும் ஆதாயம் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப எடுக்கவாய்ப்புள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வாரம் பங்குகளை விற்பனை செய்ததை காட்டிலும் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தால் அது பங்கு வர்த்தகத்துக்கு சாதகமாக இருக்கும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. விலை தொடர்ந்து உயர்ந்தால் அது இந்தியாவுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தும். நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமையன்று கடந்த ஜனவரி மாத தொழில்துறை உற்பத்தி, பிப்ரவரி மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் வெளிவருகிறது. Easy Trip Planners நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது. இன்று தொடங்கி மொத்தம் 3 நாட்கள் இந்த பங்கு வெளியீடு நடைபெற உள்ளது.
கடந்த பிப்ரவரி 26ம் தேதியுடன் நிறைவடைந்த 15 தினங்களில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் மற்றும் வழங்கிய கடன் குறித்த புள்ளிவிவரம் மற்றும் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளிவிவரம் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது. இதுதவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.