முருகன், நளினி உறவினர்களிடம் பேச மத்திய அரசின் அனுமதி கேட்டு கடிதம்! – தமிழக அரசு புது தகவல்
வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் நளினி, முருகன் பேச மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. இந்த விவகாரம் இன்னும் முடியாமல் உள்ளது.
சமீபத்தில் முருகனின் தந்தை மரணம் அடைந்தார். இதை வாட்ஸ்அப் வீடியோ காலில் பார்க்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் வெளிநாட்டுக்கு எல்லாம் வீடியோ கால் செய்ய அனுமதி இல்லை என்று தமிழக அரசு அனுமதிக்க மறுத்தது. மேலும், உறவினர்களுடன் போனில் பேசவும் அனுமதி மறுத்தது. இதனால் நளினியின் உறவினர் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களிடம் கைதிகள் வீடியோ காலில் பேசியதற்கு முன்னுதாரணங்கள் இல்லாவிட்டால், நாம் அதை உருவாக்குவோம்” என்று கூறினர். மேலும் வழக்கை வருகிற 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.