“தினகரன் யாருக்கும் பயந்து ஒதுங்கி செல்கிற ஆள் இல்லை” : டிடிவி-யின் அனல் பறக்கும் பேச்சு!
திமுகவின் Bடீமாக சில அமைச்சர்களே செயல்பட்டு வருகின்றனர் என்று டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் நாமக்கல்லில் அமமுக நிர்வாகி அன்பழகன் இல்ல திருமண விழாவில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுகவின் B டீமாக சில அமைச்சர்களே செயல்பட்டு வருகிறார்கள். நான்காண்டுகளாக திமுககூட எங்களுக்கு தொல்லை தரவில்லை, தினகரன் தான் எங்களுக்கு தொல்லை தந்தார் என அமைச்சர் ஒ.எஸ். மணியன் சொல்வதில் இருந்தே, அதிமுக- திமுகவின் 60-40% கூட்டணி தெளிவாகிறது. தமிழக முதல்வராக யார் வரவேண்டும் ?யார் வந்தால் ஆட்சி சிறப்பாக நடக்கும் என மக்கள் தீர்மானிப்பர். ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்குப் பிறகு நாம் யார் என்று எல்லோருக்கும் நிரூபிப்போம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அமமுகவுக்கு ஆதரவு இருக்கிறது.இந்த தேர்தலில் மக்களின் தேர்வு அமமுகவாக தான் இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் ஒற்றுமையோடு நின்று, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நம் கழகம் வெற்றிப்பெற பாடுபட வேண்டும்.தினகரன் யாருக்கும் பயந்து ஒதுங்கி செல்கிற ஆள் இல்லை. ஆர்.கே நகரில் செய்து காட்டியதை, தமிழகம் முழுவதும் செய்து காட்டுவோம்.
இந்த சட்டமன்ற தேர்தலில், நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதற்கான பணிகளை நான் செய்து வருகிறேன்” என்றார்.