சென்னை உள்ளிட்ட கொரோனா பாதிப்பு உள்ள இடங்களில் முழு ஊரடங்கு! – அமித்ஷா ஆலோசனை
கொரோனா பாதிப்பு உள்ள இடங்களில் மிகக் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு உள்ளதா இல்லையா என்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கு என்பது பெயரளவில் இருந்ததால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான ஊரடங்கை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தால் பிரச்னை வெடிக்கும் என்பதால், ஊரடங்கை கடைபிடிக்கும் பொறுப்பை மாநில அரசுகள் வசமே ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் புதுடெல்லி, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் கட்டாய ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அமித்ஷா ஒவ்வொரு மாநில முதல்வரையும் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். இதுபற்றி அமித்ஷா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது மாநில முதல்-மந்திரிகள் தெரிவித்த கருத்துகளை அவர் பிரதமரிடம் விளக்கி கூறினார். அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது? என்னென்ன கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது குறித்து அவர்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளில் 70 சதவீதம் 13 நகரங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் கடுமையான சட்டதிட்டங்களுடன் இரண்டு வாரங்களுக்கு 5-வது கட்ட ஊரடங்கை இந்த நகரங்களுக்கு ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடும் என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்கள் பட்டியலில் மும்பை, டெல்லி, அகமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கொல்கத்தா, இந்தூர் (மத்தியப் பிரதேசம்), ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் (ராஜஸ்தான்), சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகியவை அடங்கியுள்ளன. இங்கு ஊரடங்கை அமல்படுத்தினால் அதை செயல்படுத்துவது பற்றி மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுடன் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.