டெஸ்டில் யார் கில்லாடி?… டிராவிட்டா? சச்சினா? – அக்தரின் அசத்தல் பதில்!
பாகிஸ்தான் ஜாம்பவான் சோயிப் அக்தரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக, அவரின் ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்ற அவரின் செல்லப்பெயரை. நேற்று அவர் தன்னுடைய ரசிகர்களோடு ட்விட்டரில் உரையாடினார். ரசிகர்கள் கிடுக்குப்பிடி கேள்வி கேட்க, அதற்கு அவர் அசால்ட்டாக ஒன்லைனில் பதில் சொல்ல என ட்விட்டரே கோலாகலமாக மாறியது.
அதில் ஒரு ரசிகர், “டெஸ்ட் பார்மட்டில் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? டிராவிட்டையா? சச்சினையா?” என்று கேட்டிருந்தார். அதற்கு அக்தர் சுற்றிவளைக்காமல் ‘டிராவிட்’ என நச்சென்று கூறினார்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் ‘crictracker’ கிரிக்கெட் வலைத்தளமும் அக்தரிடம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தது. “அனைத்து பார்மட்டிலும் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர் யார்?” என்ற அந்தக் கேள்விக்கு, பாபர் அசாமும் கோலியும் தான் அதற்குத் தகுதியானவர் என்ற பதிலை அக்தர் கூறினார்.
அவர் கூறியது போலவே இரு வீரர்களும் மூன்றுவிதமான (டெஸ்ட், ஒருநாள், டி20) பார்மட்டிலும் டாப் 10 பட்டியலில் நீடிக்கின்றனர். கோலி டெஸ்டில் 2ஆம் இடத்திலும், ஒருநாள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்திலும் டி20இல் 7ஆம் இடத்திலும் இருக்கிறார். பாபர் அசாம் டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் ஐந்தாம் இடத்திலும், டி20இல் நம்பர் 2 இடத்திலும் இருக்கிறார்.
இதேபோல மற்றொரு கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார். நவீன கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் யார் என்ற கேள்விக்கு, மிட்செல் ஸ்டார்க்கை கூறியிருக்கிறார்.