திமுக எம்எல்ஏ-வை பாராட்டி போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி… திருச்சியில் பரபரப்பு!

 

திமுக எம்எல்ஏ-வை பாராட்டி போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி… திருச்சியில் பரபரப்பு!

திருச்சி

மணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனின் பொதுத்தொண்டினை பாராட்டி, தொகுதி முழுவதும் அதிமுக நிர்வாகி போஸ்டர் ஒட்டிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிரவன், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதியை வீழ்த்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து, தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, எம்எல்ஏ கதிரவன் சொந்த செலவில் அரிசி, மளிகை கொருட்கள், காய்கறி என நிவாரண பொருட்களை வழங்கி வந்தார்.

மேலும், மணச்சநல்லூர் மற்றும் சமயபுரம் கோவில் பகுதிகளில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது சொந்த பணத்தில் ரூ.75 லட்சம் மதிப்பிலான உதவிகளை செய்து வந்தார். அதேபோல், 5 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை சீரமைத்து, நாள்தோறும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

திமுக எம்எல்ஏ-வை பாராட்டி போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி… திருச்சியில் பரபரப்பு!

இந்த நிலையில், எம்எல்ஏ கதிரவனின் செயலை பாராட்டி சமயபுரத்தை சேர்ந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் முருகானந்தம் என்பவர் தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார். மேலும், தனது ஆதரவாளர்களுடன் எம்எல்ஏ கதிரவனை சந்தித்து வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இது திருச்சி மாவட்ட அதிமுகவினர் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பேசிய முருகானந்தம், மண்ணச்சநல்லூர் தொகுதியில் இதுவரை யாரும் செய்யாதவற்றை கதிரவன் தனது சொந்த செலவில் மக்களுக்கு வருவதால், அதனை பாராட்டுவதில் தவறு ஏதும் இல்லை என்று கூறினார். மேலும், இதுகுறித்து கட்சி தலைமை விளக்கம் கேட்டுள்ளதாகவும், அதற்கு உரிய விளக்கம் அளித்துள்ளாதாகவும் கூறினார்.