ஓரங்கட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு புதிய பொறுப்பு! அதிமுக தலைமை கழகம் அதிரடி அறிவிப்பு
அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டதையடுத்து ஜக்கையன் அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொறுப்புகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன்பிறகு அவருக்கு கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
இதனால் அவருக்கு அதிமுக தலைமை மீது வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், கட்சியில் வேறு பொறுப்பு கேட்டுப்பெறும் எண்ணத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஜக்கையன் சிறிது காலம் டிடிவி அணியில் இருந்துவிட்டு அதிமுகவுக்கு வந்தவர். டிடிவி தினகரனிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் மாநில பதவி கேட்டு அது கிடைக்காததால், ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு மாறியவர் ஜக்கையன்.
இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் எஸ்.டி.கே ஜக்கையன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.