‘கடமை தவறினால் ராஜினாமா’ கருப்பு பணம் வாங்காமல் நடிக்கிறேன் : கமல்ஹாசன் பேச்சு!
கடமை தவறினால் ராஜினாமா செய்கிறேன் என எங்களின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்படும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், “கருப்பு பணம் வாங்காமல் சினிமாவில் நடிக்கும் ஓரிரு நடிகர்களில் நானும் ஒருவன். வரி செலுத்தினேன், நல்லவனாக இருந்தேன் என்பது மட்டும் போதாது. மக்களுக்காக என்ன செய்தேன் என்பதே முக்கியம். பணம் படைத்தவர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஏழையாக இருந்த ஒருவர் வந்து பணக்காரராகி மக்களை ஏழைகள் ஆக்குவது தவறு. கடமை தவறினால் ராஜினாமா செய்வேன் என்று எங்களின் எம்எல்ஏக்களிடம் கையொப்பம் பெறப்படும்” என்று தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி மக்கள் நீதி மய்யத்தின் களப்பணி தொடங்கிவிட்டது. பரப்புரையின் போது ஆளும் கட்சியையும் அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சியையும் தொடர்ந்து விமர்சித்து வரும் கமல்ஹாசன், பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார். அவரது கருத்துக்கு அமைச்சர்கள் பலர் பதில் கொடுத்து வருகின்றனர் என்பது நினைவு கூரத்தக்கது.