மனைவியை பிரித்துவிட்ட சாமியார்.. ஆத்திரத்தில் குத்திக் கொலை செய்த கணவன்!
மதுரவாயல் அருகே மனைவி பிரிந்து சென்றதற்கு காரணமான சாமியாரை, கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). இவர் அப்பகுதியில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி கோவிலில் அருள்வாக்கு சொல்லி வந்தார். இவரது வீட்டின் அருகே வசித்து வந்த நபர் திருமலை(38). குடிபழக்கத்துக்கு அடிமையான திருமலை தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் சண்டையிடுவதை வாடிக்கையாக செய்து வந்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவரது மனைவி, வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். திருமலை தனது மனைவியை பல இடங்களில் தேடியிருக்கிறார். எங்கும் அவர் கிடைக்காததால் விரக்தி அடைந்த அவர், ராஜேந்திரனிடம் அருள்வாக்கு கேட்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது, தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறியதற்கு காரணம் ராஜேந்திரன் தான் என்பது திருமலைக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து ராஜேந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட திருமலை, அவர் அருள்வாக்கு சொல்லும் இடத்திற்கு சென்று கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். படுகாயமடைந்த ராஜேந்திரனை மீட்ட பொதுமக்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே திருமலை மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.