‘180 மி.லி மதுபானம் 400 ரூபாய்’.. சட்டவிரோதமாக அதிகவிலைக்கு மதுபாட்டில் விற்றவர் கைது!
தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது. குறிப்பாக கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை ஈடுகட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதனிடையே சென்னையில் மதுக்கடைக்கள் திறக்கப்படாததால் அங்கு அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் ரகசியமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வாணுவம்பேட்டையில் இருக்கும் ஒரு வீட்டில் அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு சேட்டு ராமமூர்த்தி(42) என்பவர், 180 மிலி அளவு கொண்ட மதுபானத்தை ரூ.400க்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த 112 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருக்கழுக்குன்றம், வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளில் இருந்து மது வாங்கி வந்து, விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.