ஆக்சிஜன் சப்ளை இல்லை… துடிதுடித்து அடுத்தடுத்து உயிரிழந்த 8 நோயாளிகள்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் அவதிப்படும் நோயாளிகள், ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அண்மையில், டெல்லியில் 45 நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காததால் உயிரிழந்தனர். மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானாவிலும் இது போன்ற சம்பவம் நடந்தது.
இந்த நிலையில், கர்நாடகாவில் ஆக்சிஜன் கிடைக்காமல் 8 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலாரில் உள்ள எஸ்.என்.ஆர் அரசு மருத்துவமனைகளில் 20 நோயாளிகள் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு அவர்களுக்கு ஆக்சிஜன் சப்ளை சரியாக வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, 8 நோயாளிகள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் இது போன்ற சம்பவம் நடந்தது சர்ச்சையைக் கிளப்பியது. மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளிகள் உயிரிழந்ததாக உயிரிழந்தோரின் உறவினர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் பணியாற்றிய 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.