அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு! – ஆளுநருக்கு ராமதாஸ் கோரிக்கை
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சட்ட முன்வரைவுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க கடந்த ஜூலை மாதம் தமிழக அமைச்சரவை முடிவு செய்து இதற்கான ஒப்புதல் பெற தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இன்று சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% விழுக்காடு மாணவர் சேர்க்கை இடங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்குவதற்கான சட்ட முன்வரைவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
— Dr S RAMADOSS (@drramadoss) September 15, 2020
இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 விழுக்காடு மாணவர் சேர்க்கை இடங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்குவதற்கான சட்ட முன்வரைவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
இதே நோக்கத்திற்கான தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் 3 மாதங்களாக ஆளுநர் முடக்கி வைத்திருந்தார். இந்த சட்டத்திற்கும் அதேநிலை ஏற்பட்டு விடக்கூடாது. இந்த சட்டத்தை நடப்பாண்டிலேயே செயல்படுத்த வசதியாக ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.