7 பேர் விடுதலை: ஆளுநரிடம் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை மனித உரிமை அடிப்படையில் விடுவிக்க விரைந்து முடிவெடுக்குமாறு தமிழக ஆளுநருக்கு நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை மனித உரிமை அடிப்படையில் விடுவிக்க விரைந்து முடிவெடுக்குமாறு தமிழக ஆளுநருக்கு நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம். அவர்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் நிறைவற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.
அதையடுத்து கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிடும்படி பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பியது. அதன் மீது ஆளுனர் மாளிகை இந்நேரம் முடிவெடுத்து 7 பேரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், அவர்கள் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகை இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் தாமதித்து வருகிறது.
அதேசமயம், அவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அனத வகையில் நடிகர் விஜய் சேதுபதி தமிழக ஆளுநருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
It’s not just a Tamil issue. Request for Consideration of human rights. Please Have mercy Hon. Governor. Kindly Act NOW Sir.#28YearsEnoughGovernor
— VijaySethupathi (@VijaySethuOffl) November 30, 2018
இது தொடர்பான அவரது ட்வீட்டில், ‘இது தமிழர் பிரச்னை மட்டும் அல்ல. மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் பரிசீலிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். மேலும், #28YearsEnoughGovernor (28 ஆண்டுகள் போதும் ஆளுநர்) என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.