இந்தியாவில் 24 மணி நேரத்தில் 68,898 பேருக்கு கொரோனா!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,898 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு பற்றிய கவலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் தினசரி பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதே போல், கொரோனா மரணங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில்68,898 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று இந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் 983 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 5824 ஆக அதிகரித்துள்ளது. இதில் 6,92,028 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21.58 லட்சம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 54,849 ஆக உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் 55 லட்சத்துடன் அமெரிக்கா முதல் இடத்திலும், 35 லட்சத்துடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும், 29 லட்சத்துடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதே நிலை தொடர்ந்தால் இந்தியா இன்னும் ஒரு சில நாட்களில் பிரேசிலை முந்தி இரண்டாவது இடத்தை பிடித்துவிட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மொத்த மரணங்கள் எண்ணிக்கையில் 1.74 லட்சம் மரணங்களுடன் அமெரிக்கா முதல் இடத்திலும், 1.12 லட்சத்துடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. மூன்றாவது இடத்தில் மெக்சிகோ உள்ளது. அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 59,106. தினமும் கிட்டத்தட்ட 1000 மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் விரைவில் இந்தியா மரணங்கள் எண்ணிக்கையில் மெக்சிகோவை முந்திவிடும் என்றும் எச்சரிக்கின்றனர்.