53 வயதுடைய நடிகர் மீது எப்படி காதல் ஏற்பட்டது? மனம் திறக்கும் 27 வயது மனைவி!
மிலிந்த் சோமன் மீது எப்படி காதல் ஏற்பட்டது என்பது பற்றி அங்கீதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சென்னை: மிலிந்த் சோமன் மீது எப்படி காதல் ஏற்பட்டது என்பது பற்றி அங்கீதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மாடலாக வாழ்க்கையைத் தொடங்கி பின்பு நடிகராக உருவெடுத்தவர் நடிகர் மிலிந்த் சோமன். இதுவரை சுமார் 50 படங்கள் வரை நடித்துள்ள சோமன், தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே, மிலன் என்ற பிரெஞ்சு நடிகையைத் திருமணம் செய்திருந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின்னர் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சோமன், கடந்த ஆண்டு விமானப் பணிப்பெண் அங்கீதா என்பவரைக் காதலித்து கரம் பிடித்தார்.
இவர்களின் இந்த திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் இவர்களுக்கு இடையில் உள்ள வயது வித்தியாசம் தான். இவர்களுக்கு சுமார் 26 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது.
இந்த நிலையில் அங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்களின் காதல் பற்றி பகிர்ந்துள்ளார். அதில், ‘நாங்கள் இருவரும் சந்தித்து சுமார் 6 ஆண்டுகள் கழிந்த பிறகும், என் கணவரை நேற்றுப் பார்த்தது போன்று தான் உள்ளது. அவரை முதல் முதலில் நான் சந்தித்த போது எனக்கு 20 வயது மட்டுமே, அப்போது நான் ஏர் ஏசியா விமானத்தில் பணி புரிய ஆரம்பித்தேன்.
அந்த சமயத்தில் என்னுடைய பழைய காதலர் திடீரென்று விபத்து ஒன்றில் சிக்கி உயிர் இழந்தார். அந்த வலி என்னால் தாங்க முடியாத பேர் இழப்பாக மாறியது. அதன் பின் இரண்டு மாதங்களுக்குப் பின்பு எனக்குச் சென்னையில் வேலை கிடைத்தது. அப்போது ஒரு நாள் நான் என் நண்பர்களுடன் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தோம்.
அப்போது அங்கு அதிர்ஷ்டவசமாக மிலிந்த் அதே ஹோட்டலில் தங்கியிருந்தார். நான் அவரின் மிகப்பெரிய ரசிகை. அவரை அந்த ஹோட்டலில் பார்த்ததும் என்னால் என் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த இயலவில்லை. உடனே நான் அவரிடம் சென்று இருவரும் சேர்ந்து நடனம் ஆடலாமா என்று கேட்டேன், அவர் அதை ஏற்று கொண்டு என்னுடன் ஆடியது எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பின்பு நாட்கள் செல்ல செல்ல நங்கள் இருவரும் மொபைல் போனில் மனம் விட்டுப்பேச ஆரம்பித்தோம். அவர் மீது இருந்து அன்பு காதலாக மாறியது. அவரிடம் என்னுடைய முன்னாள் காதலரைப் பற்றி கூறினேன். அப்போது அவர் உன்னை நான் முழுமையாக ஏற்று கொள்ளும் போது உன்னுடைய கடந்த கால வாழ்க்கையையும் சேர்த்து ஏற்று கொண்டேன்.
உன்னுடைய கடந்த வாழ்க்கையைப் பற்றி நீ கவலை பட வேண்டாம், நான் இருக்கிறேன் என்று கூறினார். அந்த வார்த்தை மிலிந்த் சோமன் யார் என்பதை எனக்கு உணர்த்தியது. அவர் எனக்கானவர் என்பதை உறுதிப்படுத்தியது’ என்று கூறியுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் என்ன தான் காதலாக இருந்தாலும், மகள் வயது பெண்ணுடன் திருமணம் தேவையா? என்று கடுமையாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.