45 நாட்களுக்கு பின் மது அருந்திய நபர் மதுபானக் கடை வாசலிலேயே உயிரிழப்பு!
கொரோனா வைரஸால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட, கொரோனா வைரஸ் அதிகமாக பரவியுள்ள சென்னை காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் டாஸ்மாக்குகள் தவிர தமிழகத்திலுள்ள மற்ற அனைத்து டாஸ்மாக்குகளும் இன்று திறக்கப்பட்டு விட்டன. மது வாங்குவதற்கு இன்று காலை முதல் குடிமகன்கள் வரிசையில் நின்று மதுவாங்கி செல்கின்றனர். டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை வாசலில் மது அருந்திவிட்டு படுத்து இருந்த நபர் திடீரென உயிரிழந்தார். அவர் பெயர் சரவணன்(45) ஹோட்டலில் சப்ளையராக பணியாற்றி வந்தார்.மது அருந்தி விட்டு மதுபான கடை அருகில் மயங்கிய நிலையில் இருந்தவரை தட்டி எழுப்ப முயற்சி செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டர் என்பது தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 45 நாட்களுக்கு பிறகு மது குடித்ததால் உடல்நலக்குறைவு காரணமாக சரவணன் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.