கேலி செய்தவர்களை கண்டித்த இளைஞர் மீது பாட்டில் வீச்சு – 4 பேர் கைது
திருச்சி
திருச்சியில் சகோதரனை கேலி செய்தவர்களை கண்டித்த இளைஞர் மீது பாட்டிலை வீசி தாக்கிய 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
திருச்சி வரகனேரி நித்யானந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் விக்னேஷ்(20). இவரது தம்பி கார்த்திகேயன்(18). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வளர்ப்பு நாயுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, பாலக்கரை இருதயபுரம் பாலம் பகுதியில் நின்றிருந்த சில இளைஞர்கள் கார்த்திக்கை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விக்னேஷ், நேற்று சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் சென்று கண்டித்து உள்ளார்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞர்கள் விக்னேஷை பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் புகாரின் பேரில் பலாக்கரை போலீசார் ஆட்டுக்கார தெருவை சேர்ந்த மணிகண்டன், ஹரி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்தனர்.