திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை, பணம் கொள்ளை!
திருச்சி
திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்படட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி அடுத்த கருமண்டபம் ஜெயநகரை சேர்ந்தவர் முகமது சயீத். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்தார். இந்த நிலையில், மகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 25ஆம் தேதி குடும்பத்துடன், பெங்களூரு சென்றிருந்தார். தொடர்ந்து, சிகிச்சை முடிந்து நேற்று காலை வீட்டிற்கு வந்தனர்.
அப்போது, வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததால், முகமது சயீத் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 35 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து, அவர் திருச்சி செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.