சேலத்தில் தடையை மீறி செயல்பட்ட 3 ஜவுளி கடைகளுக்கு சீல் வைப்பு!
சேலம்
சேலத்தில் கொரோனா தடையை மீறி விற்பனையில் ஈடுபட்ட பிரபல துணிக்கடை உள்ளிட்ட 3 ஜவுளி கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை பரவலை தடுக்கும் விதமாக 3 ஆயிரம் சதுர அடிக்கு மேலான பெரிய கடைகள், வணிக வளாகங்களை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பிரபல துணிக் கடைகள், நகைக் கடைகள் மூடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், சேலம் நான்கு ரோடு பகுதியில் துணிக் கடைகள் தடையை மீறி பின்வாசல் வழியாக செயல்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சூரமங்கலம் மண்டல உதவி ஆணையர் ராம்மோகன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தபட்ட கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், கடைகளில் தடையை மீறி துணி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, 3 கடைகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள், கடைகளை அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.