ஈரோடு தனியார் நிறுவனத்தில் 2-வது நாளாக வருமான வரி சோதனை- பணம், ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
ஈரோடு
ஈரோட்டில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 2-வது நாளாக நடத்தி வரும் சோதனையில் கணக்கில் வராத 16 கோடி ருபாய் பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் நிறுவனத்தில் பிரபல தொழிலதிபர்கள் பலர் பங்குதாரர்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அச்சோசியட்ஸ் சார்பில் கட்டுமான நிறுவனம், பஸ் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்பட பல்வேறு கட்டடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனம் முறையாக வருமான செலுத்ததாமல் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக எழுந்த புகாரின் பேரில், நேற்று முதல் சென்னை, ஈரோடு, மதுரை, கோவை உள்ளிட்ட 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மாலை ஈரோடு காளைமாடு சிலை அருகே தங்கபெருமாள் வீதியில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு வந்த 30 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அதிரடியாக அலுவலகத்துக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது அலுவலக பணியாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு கோப்புகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டையில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலும் வருமானத்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்த முதல் நாள் சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோட்டில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். இதனையொட்டி, கட்டுமான நிறுவன அலுவலகம் வெளிப்புறமாக பூட்டப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நிறுவன உரிமையாளரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, வருமான வரித்துறையினரின் 2-வது நாள் சோதனையில் கணக்கில்வராத 16 கோடி ரூபாய் பணம் மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.