”கொரோனாவால் குழந்தை இறந்தது” நாடகமாடிய காப்பாகத்திற்கு சீல்

 

”கொரோனாவால் குழந்தை இறந்தது” நாடகமாடிய காப்பாகத்திற்கு சீல்

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள இதயம் அறக்கட்டளையின் தனியார் காப்பகத்தில் காணாமல் போன இரண்டு குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள நிர்வாகிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

”கொரோனாவால் குழந்தை இறந்தது” நாடகமாடிய காப்பாகத்திற்கு சீல்

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் இருந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணின், 1 வயது ஆண் குழந்தை ஜூன் 29 ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், போலியான ஆவணங்களை பயன்படுத்தி நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் காப்பகத்தில் இருந்த அனைவரையும் பத்திரமாக வேறு காப்பகங்களுக்கு மாற்றும் போது , கர்நாடக மாநிலத்தை சேர்த்த ஸ்ரீதேவி என்ற பெண்ணின் 2 வயது பெண் குழந்தை தனம்மா காணாமல் போனதும் தெரிய வந்தது.

காப்பக பெண் நிர்வாகிகளான கனிமொழி, கலைவாணி ஆகிய இருவரிடம் தல்லாகுளம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மதுரை இஸ்மாயில்புரம் 4 வது தெருவை சேர்ந்த 47 வயதுடைய நகைக்கடை உரிமையாளரிடம் கடந்த ஜூன் 13 ஆம் தேதி 1 வயது ஆண் குழந்தை மாணிக்கம் 5 லட்சத்திற்கு விற்கப்பட்டது தெரியவந்தது. மேலும் 2 வயது பெண் குழந்தை கடந்த 16 ம் தேதி கருப்பாயூரணி அருகேயுள்ள கல்மேடு பகுதியை சேர்ந்த 37 வயது சில்வர் பட்டறை தொழிலாளரிடம் விறக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்ட தல்லாகுளம் காவல்துறை தனிப்படையினர், குழந்தைகளை விலைக்கு வாங்கிய நபர்களையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். பின், பெற்றோர்கள் முன்னிலையில் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் குழந்தைகளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். புகாருக்கு உள்ளான இதயம் அறக்கட்டளையில் தங்கியிருந்த 82 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மீட்கப்பட்டு மதுரை சிக்கந்தர் சாவடி திருப்பாலை பைபாஸ் உள்ளிட்ட மாவட்டத்தின் 5 காப்பகங்களுக்கு அதிகாரிகள் மாற்றியுள்ளனர். நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்த 22 முதியவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதயம் அறக்கட்டளைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அறக்கட்டளை நிர்வாகி சிவக்குமார் உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.