’’நேற்று வரை தோப்பு வெங்கடாஜலம் இன்று முதல் ’தோப்புக்கரணம்’ வெங்கடாஜலம்’’
அதிமுக முன்னாள் வருவாய்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று திமுகவில் இணைகிறார் என்றும், அவருடன் 300 அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைகிறார்கள் என்றும் தகவல். இது குறித்து அதிமுக தரப்பில் இருந்து எந்த பேச்சும் இல்லாத நிலையில், பாஜக அடித்த கமெண்டுக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கடந்த 2 011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட தோப்பு வெங்கடாச்சலத்திற்கு, வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. 2016ல் நடந்த தேர்தலிலும் தோப்பு வெங்கடாச்சலம் வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கவில்லை. பின்னர் வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைந்தார்.
2017 பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த புதிய அமைச்சரவையில் ஜெயலலிதா அமைத்த அதே அமைச்சர்கள் பங்கேற்றனர். செங்கோட்டையன் மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து அமைச்சர் எதிர்ப்பார்ப்பிலிருந்த தோப்பு வெங்கடாசலத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தோப்பு வெங்கடாசலம் விருப்ப மனு கொடுத்தார். அதிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படவே தனித்து போட்டியிட்டார். இதனால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் தோல்வி அடைந்தாலும் அவரை திமுகவுக்கு கொண்டு வர செந்தில்பாலாஜி முயற்சித்து வந்துள்ளார்.
இதையடுத்து 300 அதிமுக நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்.
இதுகுறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ’’நேற்று வரை தோப்பு வெங்கடாஜலம் இன்று முதல் ’தோப்புக்கரணம்’ வெங்கடாஜலம்’’என்று கமெண்ட் அடித்துள்ளார்.
பாஜகவின் இந்த கமெண்டுக்கு, அப்படியானால் திமுகவிலிருந்து கு.க.செல்வம் உங்க கட்சிக்கு வந்தாரே அவருக்கு இதேதான் நிலைமை என்று பலரும் கேட்கிறார்கள். உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்? என்றும் பலர் கமெண்ட் செய்கிறார்கள். டயர் நக்கி குரூப்புக்கு தோப்புக்கரணம் எவ்வளவோ பரவால்ல என்றும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.