பெண்களின் சபரிமலையில் செருப்பு காலுடன் விஜயதரணி: கொந்தளிக்கும் பக்தர்கள்
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.
கொரோனா ஊரடங்கினால் தற்போது பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை. மூன்று வேளையும் பூசாரிகளே பூஜைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இக்கோவிலின் கருவறையில் காலையில் தீபாராதனை நடைபெற்ற போது தீபத்தில் இருந்து பரவிய தீயினால் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதில் கோவிலின் கூரைகள் முழுவதும் சேதமடைந்தன.
இது முழுக்க முழுக்க ஆலய நிர்வாக கவனக்குறைபாட்டினால் ஏற்பட்டது என்று பலவேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தீ விபத்து சேதங்களை நேரில்பார்வையிட்ட பின்னர், இந்த ஆலயமானது திருவாங்கூர் சமஸ்தானத்தை சார்ந்ததாக இருப்பதால் கேரளா ஆச்சார விதிமுறைகளின் படிதான் இக்கோவிலில் பூஜைகள் செய்யப்படுகின்றன. அதனால் அரசாங்கம் உடனடியாக கேரளாவை சேர்ந்த தந்திரிகளை வைத்து தெய்வ பிரசனம் பார்த்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட பூஜா விசயங்களை முடிவு செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதையடுத்து விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி பகவதி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற அசம்பாவிதத்தை நேரில் பார்வையிட சென்றார். அப்போது அவர் செருப்பு காலுடன் கோவில் படிக்கட்டுகளில் நிற்பது போன்ற படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. உடன் பாதுகாப்பு வந்த போலீசார் செருப்பை கழற்றிவிட்டு வந்து நிற்கும்போது, விஜயதரணி மட்டும் ஏன் செருப்பை கழற்றாமல் வந்து நிற்கிறார் என்று கொந்தளிக்கின்றனர் பகவதி அம்மன் பக்தர்கள்.
மண்டைக்காட்டு பகவதி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற அசம்பாவிதத்தை தாங்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினராக பார்வையிட சென்றீர்கள் என்றாலும், கோவிலுக்குள் செல்லும் போது, காலில் அணிந்திருக்கும் செருப்பை வாசலுக்கு வெளியே கழற்றி விட்டுதான் செல்ல வேண்டும் என்ற அடிப்படை நடைமுறையை தாங்கள் அறிந்து செயல்பட்டிருக்க வேண்டாமா? என்று கேட்கின்றனர்.