21-ம் தேதி முதல் பேருந்துகளை இயக்க திட்டம்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் காரணமாக பொது போக்குவரத்து முடங்கியது. இதன் பின்னர் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த தளர்வுகளில் போக்குவரத்து தொடங்குவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். முதற்கட்டமாக கொரோனா அதிகம் பாதிக்காத மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் மட்டும் மாவட்டத்திற்கு உள்ளேயே மற்றும் இயக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல். அதுவும் முதலில் 50 சதவிகித பேருந்துகளை இயக்கலாம் என்றும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்.
மாவட்டத்திலிருந்து மாவட்டத்திற்கு பேருந்து சேவை தொடங்கும் முடிவினை இப்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும் ஆலோசித்து வருகிறார்கள். அனேகமாக வரும் 21ஆம் தேதி முதல் அனைத்து நகரங்களிலும் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி தர முடிவு செய்திருக்கிறது.
40 நாட்களுக்கு பிறகு பேருந்துகள் சேவை தொடங்கப்பட இருப்பதால் போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.