ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு சுக்கு நூறாக உடைக்கப்பட்ட 20,000 மதுபாட்டில்கள்!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திணறினர். சில இடங்களில் கள்ளச்சாராயமும் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் திருடுவதும் குடிமகன்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்ந்து அதிகரித்து வந்தன. அதுமட்டுமில்லாமல் மதுக்கடைகளை மூடியதை பயன்படுத்திக் கொண்டு பலர் மதுபானத்தை அதிக விலைக்கு விற்று வந்தனர். அதில் சில டாஸ்மாக் ஊழியர்களும் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்னர் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தும், இது போன்ற செயல்கள் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திண்டிவனம் போலீசாரால் 20,000 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த மதுபாட்டில்களை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். அதனை விசாரித்த நீதிபதி நளினி தேவி, அதனை அழிக்குமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன் படி, இன்று ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு, நீதிபதி முன்னிலையில் 20,000 மதுபாட்டில்களையும் போலீசார் அழித்துள்ளனர்.