புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி லாபம்..

 

புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 133 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இடையில் சிறிய சரிவு கண்டாலும் வர்த்தகம் மீண்டும் எழுச்சி கண்டது. பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தை தொட்டன. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் மாருதி சுசுகி இந்தியா உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, சன்பார்மா மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி லாபம்..
மாருதி சுசுகி இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,672 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,282 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 180 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.187.98 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.75 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி லாபம்..
சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 133.14 புள்ளிகள் உயர்ந்து 47,746.22 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 49.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,981.95 புள்ளிகளில் முடிவுற்றது.