2019 ஏப்ரல் முதல் குட்பை கூறப்போகும் கூகுள் பிளஸ் சமூக வலைதளம்

 

2019 ஏப்ரல் முதல் குட்பை கூறப்போகும் கூகுள் பிளஸ் சமூக வலைதளம்

கூகுள் பிளஸ் சமூக வலைதள சேவை நிறுத்தப்படுவது குறித்து கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியா: கூகுள் பிளஸ் சமூக வலைதள சேவை நிறுத்தப்படுவது குறித்து கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளஸ் சமூக வலைதள சேவையை முன்கூட்டியே நிறுத்த முடிவு செய்துள்ளது. முன்னதாக மென்பொருள் டெவலப்பர்களுக்கு கூகுள் பிளஸ் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை அம்பலப்படுத்திய பிழை இரண்டாவது முறையாக கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சமீபத்திய பிழை யாதெனில் தனிப்பட்ட முறையில் ப்ரோஃபைல் விவரங்களை வைத்திருந்த பயனர்களின் விவரங்களையும் ஆப் டெவலப்பர்கள் இயக்க வழி செய்வதாக அமைந்தது. ஆப் டெவலப்பர்கள் இந்த விவரங்களை ஆறு நாட்களுக்கு கவனக்குறைவாக வைத்திருந்தனர் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கமான சோதனையின் போது இந்த பிழை கண்டறியப்பட்டு ஒரே வாரத்தில் பிழை சரி செய்யப்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.

முதல் முறையாக இதேபோன்ற ஒரு பிழையை கூகுள் நிறுவனம் கடந்தாண்டு அக்டோபர் மாதத்திலும் கண்டறிந்து தெரிவித்தது. மார்ச் 2018இல் பிழை கண்டறியப்பட்டு, அது உடனடியாக சரி செய்யப்பட்டதாக தெரிவித்தது. இந்த பிழை பயனர்களின் ப்ரோஃபைல் விவரங்களான பயனரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, வேலை மற்றும் வயது உள்ளிட்டவற்றை அம்பலப்படுத்தியது. இந்த பிழையில் சுமார் ஐந்து லட்சம் அக்கவுன்ட்கள் பாதிக்கப்பட்டன.

கூகுள் கணினிகளை மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் எதுவும் ஊடுறவவில்லை என்றும், டெவலப்பர்கள் யாரும் பயனர் விவரங்களை தவறாக பயன்படுத்தியதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கூகுள் பிளஸ் சேவையை ஆகஸ்டு 2019இல் நிறுத்துவதாக கூகுள் நிறுவனம் அறிவித்து இருந்தது. இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக தனியுரிமை சார்ந்த பிரச்சனையில் கூகுள் சிக்கியுள்ளதைத் தொடர்ந்து கூகுள் பிளஸ் சேவை ஏப்ரல் 2019 வாக்கில் நிறுத்தப்படுகிறது.

மேலும் அடுத்த 90 நாட்களுக்குள் டெவலப்பர்களுக்கான ஏ.பி.ஐ. சேவை நிறுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி கூகுள் பிளஸ் குறைந்த அளவு பயன்பாடு கொண்டிருக்கிறது. இதனால் தளத்தை வெற்றிகரமாக நடத்துவதில் பல்வேறு சவால்கள் நிலவுவதாலும் கூகுள் நிறுவனம் இந்த முடிவை மேற்கொண்டிருக்கலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.