பிளக்ஸ் போர்டு நிறுவன உரிமையாளர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை
கோயமுத்தூர்
கோவை அருகே பிளக்ஸ் போர்டு நிறுவன உரிமையாளரின் வீட்டு பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் பிளக்ஸ் போர்டுகள் அச்சடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி. தம்பதி இருவரும் நாள்தோறும் காலையில் கடைக்கு சென்றுவிட்டு, இரவு வீட்டிற்கு திரும்புவதும் வழக்கம். இதேபோல் நேற்று காலை நாகராஜன் மற்றும் மீனாட்சி ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர். இந்த நிலையில், சிறிதுநேரத்தில் அவரது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து நாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக நாகராஜன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் ரத்தினபுரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாயை வர வழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்நது, இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கொள்ளை நடந்த நேரம் குறித்து முரண்பட்ட தகவல் கிடைப்பதால் நாகராஜன் குடும்பத்தினிரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.