அரக்கோணம் அருகே இரு பிரிவினர் இடையே மோதல் – புதுமாப்பிள்ளை உட்பட இருவர் அடித்துக்கொலை!
ராணிப்பேட்டை
அரக்கோணம் அருகே இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில், புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர்.
ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அர்ஜுனன் (23), செளந்தர் (21), சூர்யா (24) மற்றும் மதன்(16). நண்பர்களான இவர்கள், நேற்று மாலை குருவராஜபேட்டை பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது, கடையில் இருந்த பெருமாள் ராஜபேட்டை பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தினருடன் அவர்களுக்கு மோதல் ஏற்பட்டு உள்ளது.
அப்போது, இரு தரப்பினரையும் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர். இந்த நிலையில், இரவு 8 மணியளவில் அர்ஜுனன் மற்றும் அவரது நண்பர்கள் பெருமாள் ராஜபேட்டை வழியாக வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை வழிமறித்த 20 பேர் கொண்ட கும்பல் கத்தி, இரும்பு கம்பிகளால் கடுமையாக தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த 4 பேரையும், சோகனூர் கிராம மக்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அர்ஜூனன் மற்றும் சூர்யா ஆகியோர் உயிரிழந்தனர். அர்ஜூனனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், அவர் கொல்லப்பட்ட சம்பவம் கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
தகவல் அறிந்த ராணிப்பேட்டை எஸ்.பி., சிவகுமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.