சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி.. அலுவகம் தற்காலிக மூடல்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியது. குறிப்பாக சென்னையிலே பெருமளவு பாதிப்பு ஏற்பட்டதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருந்த விமான சேவை கடந்த மாதம் 25 ஆம் தேதி மீண்டும் தொடங்கியது. விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கும், விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருக்கும் இந்திய விமான நிலைய ஆணையமான AAI அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அலுவலகத்தில் பரவினால் இரண்டு நாட்கள் விடுமுறை அளித்து மீண்டும் தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதன் படி, அந்த அலுவலகம் வரும் 7 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு நாட்கள் விடுமுறையில் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.