அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பி மரணம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…

 

அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பி மரணம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே அண்ணன் இறந்த அதிர்ச்சியில், தம்பியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகேயுள்ள வக்காரமாரி கீழ தெருவை சேர்ந்தவர் வீரமணி(72). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவரது தம்பி குணசேகரன் (65). இவர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு ஜமுனா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பி மரணம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…

சகோதரர்கள் இருவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி அன்று மாலை வீட்டில் இருந்த வீரமணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு மணல்மேடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு வீரமணியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன் கதறி அழுதார். அப்போது, அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இறப்பிலும் இணை பிரியாத சகோதரர்கள் இருவரது உடல்களும் நேற்று, அவர்களது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் வக்காரமாரி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.