2 பெண் குழந்தைகளை ஆற்றில் வீசிய தந்தை: அதிர வைக்கும் பின்னணி!
குடிபோதையிலிருந்த ஒருவர் தனது இரு மகள்களை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்: குடிபோதையிலிருந்த ஒருவர் தனது இரு மகள்களை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பத்தடி பாலத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும், ஷோபனா(13), லாவண்யா(11), ஹரீஸ்(9), ஸ்ரீமதி(7), குணசேகரன்(5) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர்.
கூலி தொழிலாளியான பாண்டிக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அவரது மனைவி ரேணுகாவுக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பாடு வந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இருவரும் கடந்த ஓராண்டாகப் பிரிந்து வாழந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ரேணுகாதேவியின் சகோதரர் குழந்தைகளைக் கவனிக்காமல் பொறுப்பில்லாமல் இருக்கிறாயே என பாண்டியிடம் நியாயம் கேட்டுள்ளார். இதனால் குடிபோதையிலிருந்த பாண்டி மகள்கள் லாவண்யா மற்றும் ஸ்ரீமதியை அழைத்துக் கொண்டு போய் அப்பகுதியில் உள்ள அரசலாற்றில் தூக்கி வீசி உள்ளார். இதைப் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆற்றில் குதித்து லாவண்யாவை மட்டும் மீட்டு கரை சேர்த்தனர். இதையடுத்து வீட்டிற்குச் சென்ற பாண்டி மகள்களை ஆற்றில் வீசி விட்டேன் என்று மனைவியிடம் கூற அதிர்ச்சி அடைந்த ரேணுகாதேவி ஆற்றங்கரைக்கு ஓட லாவண்யா மட்டும் மீட்கப்பட்டு இருந்தார். ஆனால் மற்றொரு மகள் ஸ்ரீமதியை கண்டுபிடிக்க முடியவில்லை.இதனிடையே பாண்டியை பொதுமக்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த பாண்டியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து ஸ்ரீமதியை தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.