ஈரோட்டில் இன்று 182 இடங்களில் 17 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு!

 

ஈரோட்டில் இன்று 182 இடங்களில் 17 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு!

ஈரோடு

ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று 182 இடங்களில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவர்கள், போலீசார், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா 2ஆம் அலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினார். இதனால், நீண்ட வரிசையில் காத்து நின்று டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போட்டு சென்றனர். இதனிடையே, கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில், அந்தந்த ஓட்டுச்சாவடியில் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செய்து கொண்டனர்.

ஈரோட்டில் இன்று 182 இடங்களில் 17 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு!

இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் படி கொரோனா தடுப்பூசி போடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தலைமையில் வாக்காளர் பட்டியல் படி வீடுகளுக்குச் சென்று, முன்னுரிமை சீட்டு வழங்கி தடுப்பூசி போட அழைக்கப்பட்டனர். அந்த சீட்டில் தேதி, வார்டு எண், பெயர், விலாசம், மொபைல் எண், அலுவலர் கையெழுத்து, தடுப்பூசி போடும் இடம் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 9 ஆயிரத்து 50 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து, நேற்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று வாக்காளர் பட்டியல் படி மாவட்டம் முழுவதும் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, நம்பியூர், சத்தியமங்கலம், தாளவாடி, மொடக்குறிச்சி உள்பட 182 இடங்களில் 17 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருகிறது. இதனால், கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக ஏராளமானோர் தொடர்ந்து காத்து இருக்கின்றனர்.