மறைந்தார் அ.மா.சாமி! எழுத்து உலகுக்குப் பேரிழப்பு என வை.கோ. இரங்கல்

 

மறைந்தார் அ.மா.சாமி! எழுத்து உலகுக்குப் பேரிழப்பு என வை.கோ. இரங்கல்

எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான அ.மா.சாமி மறைந்தார்.
1935ல் பிறந்த அருணாசலம் மாரிசாமி எனும் அ.மா.சாமி, ராணி வார இதழில் 44 ஆண்டுகள் ஆசிரியர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். குறும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் என்கிற புனைப்பெயர்களில் ஏராளமான சிறுகதைகள் எழுதி இருக்கிறார். இதழியல் குறித்தும் ஏராளமான நூல்களை எழுதி இருக்கும் அ.மா.சாமி திருக்குறளுக்கும் புதிய உரை எழுதி இருக்கிறார்.

அ.மா.சாமியின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

மறைந்தார் அ.மா.சாமி! எழுத்து உலகுக்குப் பேரிழப்பு என வை.கோ. இரங்கல்

’’தினத்தந்தி, ராணி, ராணிமுத்து இதழ்களின் முன்னாள் ஆசிரியர், அ.மாரிசாமி என்ற அ.மா.சாமி இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்குச் செல்லும் வழியில், ஒரு மிகச்சிறிய குக்கிராமமான குரும்பூரில் இருந்து, சிறிய வயதில் சென்னைக்கு வந்த சாமி அவர்கள், ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்களின் பேரன்பைப் பெற்றார்; தினத்தந்தி குடும்பத்தோடு, இரண்டறக் கலந்து, இதழியலுக்காகவே தன் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டார்.

கற்பனையுடன் நகைச்சுவை கலந்து வழங்கிய மூத்த எழுத்தாளர்களுள் முன்னோடி அ.மா.சாமி ஆவார். இலக்கியம் எழுதலாம், பேசலாம்; ஆனால், நகைச்சுவை எழுத்தும், பேச்சும் எல்லோருக்கும் எளிதில் வாய்த்து விடுவது இல்லை.

அதிலும் குறிப்பாக, ஒருவரைப் பகடி செய்கின்றபொழுது, அவர் தன்னைத்தான் அப்படிப் பகடி செய்கின்றார் என்பது புரியாமலேயே, எடுத்த உடன் முதலில் சிரித்துவிட்டு, பிறகு சிந்திக்கின்ற பொழுது, அவர் தன்னுடைய குறைகளைத்தான் அப்படி அழகாகச் சுட்டிக் காட்டி இருக்கின்றார் என்பதைப் புரிந்துகொண்டு, நினைத்து நினைத்து மகிழச் செய்யும் கலை நகைச்சுவை ஆகும். அத்தகைய எழுத்து நடை வாய்க்கப் பெற்றவர் அ.மா. சாமி. ஏழை, எளிய பாமர மக்களுக்கு எளிதில் புரிகின்றவகையில் எழுதுவதில் அவருக்கு இணை சொல்ல முடியாது.

பெர்னார்ட் ஷா போன்ற, மிகப் புகழ்பெற்ற அறிஞர்கள், தாங்கள் வாழ்ந்த காலத்தில், தங்கள் சமூகத்தைக் கேலி செய்து, சீர்திருத்தவாதிகளாகப் புகழ் பெற்றார்கள். அத்தகைய நிலையில் வைக்கத்தக்க ஓர் அரிய எழுத்தாளர்தான் அ.மா. சாமி அவர்கள் ஆவார்கள். சின்னச்சின்ன சொல்லோவியங்களை, மிக அழகாக வழங்கினார். அரிய ஆய்வு நூல்களையும் தந்தார். பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வந்து, அவர் எழுதிய பயணக் கட்டுரைகளில் புதிய செய்திகளைத் தந்தார்.

மிக்க தேர்ச்சியோடும், அருமையான அழகியலோடும் தமிழில் எழுதியவர்களுள் முதல் வரிசையில் வைத்து மெச்சத்தகுந்த சாமியின் மறைவு, எழுத்து உலகுக்குப் பேரிழப்பு ஆகும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், தினத்தந்தி குழுமத்தினருக்கு, ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.’’என்று வைகோ தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.