விசிக மாநில சிறப்பு செயற்குழுவின் 13 தீர்மானங்கள்

 

விசிக மாநில சிறப்பு செயற்குழுவின் 13 தீர்மானங்கள்

சென்னை அண்ணா நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தொல்.திருமாவளவன் தலைமையில் கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விசிக மாநில சிறப்பு செயற்குழுவின் 13 தீர்மானங்கள்

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையான அர்ப்பணிப்போடு தீவிரமாகப் பாடாற்றுவது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது என்று முதல் தீர்மானமாக நிறைவேறியது.

கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் மேற்கொள்வதற்கு தலைவர் திருமாளவனுக்கு இந்த செயற்குழு முழுமையான அதிகாரத்தை அளிக்கிறது என்று இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் இணைந்ததே ஒருங்கிணைந்த தமிழர் தாயகம் என்று இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலைபாட்டை இந்திய அரசு தொடர்ந்து இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் இந்த செயற்குழு வலியுறுத்துகிறது என்று மூன்றாவது தீர்மானமும்,

விசிக மாநில சிறப்பு செயற்குழுவின் 13 தீர்மானங்கள்

அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தையே சீன ராணுவம் உருவாக்கி இருக்கிறது என்றும் செய்திகள் வெளிவருகின்றன. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்த செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியாவின் எல்லையைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று நான்காவது தீர்மானமும்,

மூன்று மாதங்களாக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை இந்த செயற்குழு முழுமையாக- வலுவாக ஆதரிக்கிறது. பிரதமர் மோடி அவர்கள் வறட்டு கவுரவம் பார்க்காமல் மூன்று வேளாண் விரோத சட்டங்களையும் திரும்பப் பெற முன்வர வேண்டும் என்று இந்த செயற்குழு வலியுறுத்துகிறது என்ற் ஐந்தாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் எஸ்சி/ எஸ்டி மக்களுக்கான நிதி ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டு இருப்பதை இந்த செயற்குழு சுட்டிக்காட்டி வன்மையாகக் கண்டிக்கிறது.எஸ்சி / எஸ்டி மக்களின் மக்கள் தொகைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க முன்வர வேண்டும் என்றும் இந்த செயற்குழு வலியுறுத்துகிறது என்ற 6வது தீர்மானமும்,

‘போக்சோ’ சட்டத்தின்படி மாவட்டம்தோறும் தனி நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் இந்த செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது என்று 7வது தீர்மானமும்,

விசிக மாநில சிறப்பு செயற்குழுவின் 13 தீர்மானங்கள்

இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். சொந்த நாட்டிலேயே அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்படுகின்றனர். இத்தகைய மதவெறிப் போக்கைக் கைவிட வேண்டும் என்றும் சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் இந்தச் செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று 8ம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் தமிழர் விரோத நிலைபாட்டையும், மத்திய அரசின் தூண்டுதலின் படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் எடுத்துள்ள முடிவையும் இந்த செயற்குழு மிகவன்மையாகக் கண்டிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அங்கு உறுதியாக வாதாடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத்தருமாறும், முறையாக விடுதலை செய்யப்படும்வரை இந்த ஏழு பேருக்கும் பரோல் வழங்குமாறும் தமிழக அரசை இந்த செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று 9வது தீர்மானத்தையும்,

இதுவரையிலும் தமிழ்நாட்டில் கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த சமூகநீதிக் கொள்கையைக் கைவிட்டு ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக அரசு மிகப்பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறது. அதிமுக அரசின் சமூகநீதிக்கு எதிரான இந்தப் போக்கை கண்டிப்பதோடு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட 69 % இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாத்திட உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை இந்த செயற்குழு வலியுறுத்துகிறது என்று 10வது தீர்மானமும்,

விசிக மாநில சிறப்பு செயற்குழுவின் 13 தீர்மானங்கள்

மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று இந்த செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது என்ற 11வது தீர்மானமும்,

அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பை பொதிகை தொலைக்காட்சியில் உடனே நிறுத்தவேண்டும் என்று மத்திய அரசை இந்த செயற்குழு வலியுறுத்துகிறது என்ற 12வது தீர்மானமும்,

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேர்வுமுறை மாற்றப்பட வேண்டும். எனவே, உடனடியாக நடந்துமுடிந்த தேர்வை ரத்து செய்ய வேண்டுமாறு தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்ற 13வது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.