’’தென்னகத்தை புறக்கணிப்பது என்பது கண்டனத்திற்குரியது, வருத்தத்துக்குரியது’’ – டி.ராஜேந்தர்

 

’’தென்னகத்தை புறக்கணிப்பது என்பது கண்டனத்திற்குரியது, வருத்தத்துக்குரியது’’ – டி.ராஜேந்தர்

கொரோனா தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. ஊரடங்கின் தளர்வுகளில் ரயில், பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மால்கள் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், திரையரங்குகள், பள்ளி-கல்லூரிகள் திறக்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில், விரைவில் திரையரங்குகள் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தினை மத்திய அரசினுடைய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஏற்பாடு செய்திருக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க தென்னகத்தினை புறக்கணித்துள்ளதால் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் டி. ராஜேந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘’மத்திய அரசினுடைய பேரிடர் மேலாண்மை அமைப்பின் சார்பாக மீண்டும் திரையரங்குகளை திறப்பது குறித்து ஒரு கலந்தாலோசனை கூட்டத்தினை வருகின்ற செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று நடத்தவிருக்கிறார்கள். அதற்காக திரைப்பட உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட அதிபர்கள் சங்கத்தை சார்ந்தவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். வட இந்தியாவில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், தென்னிந்தியாவில் இருப்பவர்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களை புறக்கணித்து விட்டார்கள். எங்கள் தென்னகத்திலே ஆண்டுக்கு 800 படங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால், அழைப்பு இல்லை. அதுவே, குறைவான எண்ணிக்கையில் படங்களை வெளியிடும் குஜராத்தில் இரண்டு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

எங்கள் தென்னகத்தை மட்டும் ஏன் புறக்கணிக்கிறார்கள். இதைப்பற்றி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்னை நினைக்கிறது என்றே தெரியவில்லை? தென்னகத்தை புறக்கணிப்பது என்பது கண்டனத்திற்குரியது, வருத்தத்துக்குரியது. எங்களுடைய ஆதங்கத்தை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் சங்க கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் இதை நான் சொல்லிக்கொள்கின்றேன்.’’என்று குறிப்பிட்டுள்ளார்.