மரக்காணம் அருகே ராட்சத அலையில் சிக்கி, 10ஆம் வகுப்பு மாணவர் மாயம்
விழுப்புரம்
மரக்காணம் அருகே கடலில் குளித்த 10ஆம் வகுப்பு மாணவர் ராட்சத அலையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியை சேர்ந்த பிச்சாண்டி மகன் பிரபு. இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில, நேற்று மாலை காணும் பொங்கலையொட்டி பிரபு, தனது நண்பர்களுடன் மரக்காணம் அருகேயுள்ள நொச்சிக்குப்பம் கடற்கரை பகுதிக்கு சென்று குளித்துள்ளார். அப்போது கடலில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கிய பிரபு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக மரக்காணம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கடலோர காவல்படையினர் மற்றும் அந்த பகுதி மீனவர்களின் உதவியுடன் படகுகள் மூலம் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் தினத்தில் மாணவர் கடலில் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் கூனிமேடு பகுதி கிராம மக்களை சோகத்தில் மூழ்க செய்துள்ளது.